சென்னையில் பெண்ணிடம் ஆபாச பேச்சு: யூடியூப் சேனலை சேர்ந்த மூன்று பேர் கைது

சென்னையில் உள்ள பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இளம்பெண்களிடம் ஆபாசமாகப் பேசி பேட்டி எடுத்த யூடியூப் சேனல் குழுவினர் 3 பேரை காவல்துறையினர் நேற்றைய தினம் கைது செய்தனர்.
2020 எப்படி போனது என்று பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இளம்பெண்களிடம் பேட்டி எடுத்துள்ளனர். அதில் ஒரு பெண்ணிடம் பேசிய முறையானது மிகவும் ஆபாசமாக இருந்ததாக பெசன்ட் நகரை சேர்ந்த லெட்சுமி என்ற பெண் அந்த யூடியூப் சேனல் குழுவினர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூடியூப் சேனலின் (Chennai Talk YouTube channel) தொகுப்பாளர் 23 வயதுடைய அசென் பாட்ஷா, கேமராமேன் 24 வயதுடைய அஜய் பாபு மற்றும் சேனல் உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யூடியுப் தளத்தில் பிரபலமான இவர்கள் எப்போதும் பெண்களிடம் இரட்டை அர்த்தங்களில் கேள்வி கேட்டு அதை நகைச்சுவை கலந்து பதிவேற்றம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.